நம்முடைய மனம் இருக்கிறதே, விசித்திரமானது. பல இடங்களில் பொறிகள் வைத்திருக்கும். அளவுக்கு மீறிய சாப்பாட்டினால் உடம்பை வருத்திக் கொள்ள வேண்டாம் என்று கட்டுப்படுத்தினால் வேறு பக்கத்தில் உடைத்துக் கொண்டு போக முயற்சிக்கும். குரங்குக்குத் தலையில் தட்டி வைக்கும் சாமியார் போல தொடர்ந்து விழிப்பாக இல்லா விட்டால், தலை மேல் ஏறி முடியை உலுக்க ஆரம்பித்து விடும்.
ஏன் எதையும் கட்டுபடுத்த வேண்டும், அப்படியே போகிற போக்கில் விட்டு விட வேண்டியதுதானே என்ற ஒரு தத்துவம் ஒரு காலத்தில் இருந்தது. என்னதான் செய்தாலும் இப்படியே வாழ்ந்து ஒரு நாள் சாகத்தான் போகிறோம். அதற்கு நன்றாக அனுபவித்து வாழ்ந்து விட்டுப் போக வேண்டியதுதானே. எதற்கு இவ்வளவுக் குழப்பங்கள் என்று நினைப்பதுண்டு.
அப்படி வாழும் பலரையும் பார்த்திருக்கிறேன். எப்போதும் சிரித்த முகமாய், வஞ்சனை இல்லாத உடம்புடன், எல்லோருக்கும் நண்பர்களாய் இருப்பவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். எதற்கு அலட்டிக் கொள்ளாமல் பிடித்ததைச் செய்து கொண்டு வாழ்க்கை என்னும் ஆற்றில் மிதந்து போய்க் கொண்டிருப்பார்கள்.
நமக்கு இருக்கும் தன் முனைப்பில் எதிர் நீச்சல், வண்ணத்துப் பூச்சி நீச்சல், கால்களை உதைத்தல் என்று பல வகைகளில் ஆற்றின் போக்குக்கு எதிராக முயன்று கொண்டே இருக்கிறோம். என்னதான் செய்தாலும் கடைசியில் கடலுக்குப் போய்ச் சேர வேண்டியதுதானே!
ஆறு ஏன் ஒரு திசையில் போகிறது? கடலிலேயே போய்ச் சேர வேண்டும் என்பது விதியா என்ன? உள்நாட்டிலேயெ கிளைகளாகப் பிரிந்து வடிந்து விடும் ஆறுகளும் இருக்கின்றன. நாம் மிதக்கும் ஆற்றில் நமது கை கால் உதைத்தலில் நமக்குக் கண்ணுக்குத் தெரியும் வகையில் ஆற்றின் போக்கில் மாற்றம் தெரிவதில்லை. அதனால் மனம் சோர்ந்து விடுகிறது. பக்கத்தில் மிதக்கும் கட்டையுடன் சச்சரவு இட்டுக் கொண்டே விதி வகுத்த திசையில் போய் விழுகிறோம்.
கொஞ்சம் சிந்திக்க ஆரம்பிக்கும் போது என்ன செய்து என்ன ஆகப் போகிறது என்று ஒரு சலிப்பும் வந்து விடுகிறது.
நாம் உதைக்கும் ஒவ்வொரு உதையிலும், நாம் அடிக்கும் ஒவ்வொரு எதிர் நீச்சலுக்கும் ஒரு பலன் கண்டிப்பாக இருக்கிறது. வாழ்க்கையில் ஒரு அங்கமான நாம் செய்யும் ஒன்று வாழ்க்கையை, இந்த உலகைப் பாதிக்கிறது. அது ஒரு சங்கிலித் தொடராக வியாபித்து உலகையே மாற்றி விடுகிறது.
நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் போது “நான் கறுப்புச் சந்தையில் சினிமா டிக்கெட் வாங்காமல் இருந்தால் எனக்கு என்ன நன்மை, சினிமா பார்க்காமல் திரும்பி வருவதுதான் மிஞ்சும். செய்யக் கூடியவன் தவறுகளைச் செய்து கொண்டேதான் இருப்பான், குழந்தை உணவில் கலப்படம் செய்பவன், நான் பிளாக் டிக்கெட் வாங்காமல் இருந்தால் மாறி விடுவானா?” என்று பேச்சு வந்தது.
கறுப்புச் சந்தையால், படம் பார்க்க வந்திருக்கும் ஒரு தொழிலாளிக்கு படம் பார்க்க முடியவில்லை. நான் கூடுதல் பணம் கொடுத்து வாங்கியிருந்த இருக்கை, கறுப்புச் சந்தை இல்லாமல் இருந்தால் அவருக்குப் போய் சேர்ந்திருக்க வேண்டியது. அவர் கண் முன்னால் நடப்பதை பார்த்து மனம் நொந்து போகிறார். நாம் என்ன நேர்மையாக இருந்து என்ன பலன், காசு இருப்பவனுக்குத்தான் வாழ்க்கை என்று விரக்தி அடைகிறார்.
அடுத்த நாள் குழந்தை உணவு தயாரிக்கும் தொழிற்சாலையில் தனது வேலைக்குப் போகிறார். ஒரு இயந்திரத்தில் ஏதோ கோளாறு இருப்பது அவருக்குத் தெரிய வருகிறது. சின்ன அடையாளம்தான், அனுபவ சாலியான இவருக்குப் புலப்பட்ட அந்த நுணுக்கம் வேறு யாருக்கும் பல மணி நேரம் வரை தெரியாமல் போகலாம்.
அது அவரது பொறுப்பைச் சார்ந்தது இல்லை. ஆனால் நினைத்தால் எச்சரித்து இயந்திர அமைப்பைச் சரி செய்ய வைத்து தரக் குறைவைத் தவிர்க்கலாம். விரக்தியான மன நிலையில் இருக்கும் அவர், ‘போகட்டும், தரம் குலைந்தால் ரிஜெக்ட் ஆகட்டும், முதலாளிக்குக் கொஞ்சம் லாபம் குறைந்தால் என்ன நொடித்தா போவார்’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்.
அரை டன் மாவு தயாராகி தரக் கட்டுப்பாட்டுக்கு வருகிறது. கோளாறும் பிடிபட்டு விடுகிறது. முதலாளிக்கோ காசை விட்டுக் கொடுக்க மனதில்லை. இப்படி ஒவ்வொன்றாக விட்டு விட்டால் அடுத்த முறை அவரும் சினிமா தியேட்டரில் வரிசையில் நிற்க வேண்டியதுதான். கறுப்புச் சந்தை விலைக்கு எப்படி காசு மிஞ்சும்.
ஒரு அரை கிலோ சரிக் கட்டும் வேதிப் பொருளைக் கலந்து அரசு தர நிர்ணய வரம்புகளைக் காட்டி விடுங்கள், எப்படியும் பெரிய பிரச்சனையில்லை. ஆறு மாதங்களுக்குள் விற்றுப் பயன்படுத்தப்பட்டு விட்டால் தீங்கு எதுவும் இல்லை என்று முடிவு செய்து விடுகிறார். ஆனால் டப்பாவின் மீது ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம் என்று முத்திரை. தான் மட்டும் உத்தமனாக ஏன் இருக்க வேண்டும் என்று அந்த முதலாளியும் ஒரு முடிவு எடுக்கிறார்.
அதில் பல டப்பாக்கள் ஆறு மாதங்களுக்குள் விற்றுப் போகாமல் நாட்டின் பல்வேறு மூலைகளில் ஆறு மாதம் காலாவதி ஆகிப் போய் சில குழந்தைகளுக்கு நச்சு ஏற்பட்டு இறக்க நேரிடுகிறது. ஏதோ உணவுப் பொருள் ஒவ்வாமை என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளித்து வேலையை முடித்து விடுகிறார்கள்.
இப்படி கோடிக் கணக்கான மனிதர்களின் சரியான நடவடிக்கைகளில்தான் நமது வாழ்க்கை அடங்கி இருக்கிறது. நாம் மனம் வெறுத்து நமது கடமை தவறினால் அது எந்தத் திசையில் நம்மைப் பாதிக்கும் என்று யாருக்குத் தெரியும்.
தேங்க்ஸ் டு WordPress.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக